வள்ளுவன் பார்வையில் வாசுதேவன்

திருவள்ளுவர் எங்கனம் திருமாலை போற்றிதுதித்தார் என்பதை இப்பதிவில் எழுதியுள்ளேன்.
                     
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு 

என தன் நூலை தொடங்கும் வள்ளுவர் முதற் குறட்பாவிலேயே மிக உயர்ந்த ஸ்ரீ வைஷ்ணவ தத்துவத்தை விளக்க ஆரம்பித்துவிட்டார்.

                                 அகாரார்தோ விஷ்ணுஹு ஜகதுதாய ரக்ஷா பிரளய க்ருத் மகாரார்தோ ஜீவாஹ ததுபகரணம் வைஷ்ணவமிதம்
உகாரூனஞார்ஹம் நியமயதி சம்பந்தமனயோஹ் த்ரயி சாரஹா த்ரயாத்மா பிரணவ இமமார்த்தம் சமதிஷாத்

                                     மேலே சொல்லப்பட்ட சமஸ்க்ருத ஸ்லோகத்தின் பொருள் யாதெனின், ஓம் எனும் பிரணவம் 'அ' 'உ' 'ம' எனும் மூன்று எழுத்துக்களின் சங்கமமேயாகும். இதில் 'அ' என்கிற எழுத்து ஸ்ரீ மஹா விஷ்ணுவையும் 'ம' என்கிற எழுத்து ஜீவாத்மாக்களான நம்மையும் குறிக்கும். 'உ' என்கிற எழுத்து பரமாத்மாவான ஸ்ரீமன் நாராயணனுக்கும் ஜீவாத்மாக்களான நமக்கும் உள்ள தொடர்பைக் குறிக்கும். ஜாதி வேறுபாடுகளையும் அது செய்யும் கொடுமைகளையும் தீவிரமாக எதிர்க்கும் ஸ்ரீ வைஷணவம் எல்லா உயிர்களையும் ஒன்றாக பார்க்கும் சம நோக்கையே போதிக்கிறது. எல்லா உயிர்களும் சரணடைவது ஸ்ரீமன் நாராயணனையே. அந்த திருமாலே உலகம் யாவையும் தோற்றுவித்து, காத்து, பின் பிரளய காலத்தில் தன் திருவயிற்றில் வைத்து காக்கின்றான்.

                                திருக்குறளுக்கு வருவோம். திருமாலே உலகத்திற்கு முதலானவன் என்று சொல்லப்புகுந்த வள்ளுவர் அந்த ஆதி பகவானான ஆதி நாராயணனை குறிக்கும் அகரத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டு 'எப்படி அ எழுத்துக்கெல்லாம் முதன்மயானோதோ அது போல திருமால் உலகுக்கெல்லாம் முதன்மையானவன். அவனோ ஆதி நாராயணனன், அவன் தேவியோ ஆதி லக்ஷ்மி. அவன் தொண்டனோ ஆதிசேஷன் - முதல் தொண்டன். இப்படி எல்லாம் ஆதியாக எல்லாவற்றுக்கும் ஆதியாக இருப்பது திருமாலே என்பது வள்ளுவன் வாய்மொழி.


மலர்மிசை ஏகினான்மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்   


திருமால் ஐந்து நிலைகளில் உறைகிறான். 1.பர- ஸ்ரீ வைகுந்தத்தில் இருக்கும் ஸ்ரீ பரமபத நாதன் 2. வியுஹ - திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்ட திருக்கோலம். 3. விபவ - ஸ்ரீ ராம, ஸ்ரீ கிருஷ்ண, லக்ஷ்மி வரா ஹ, லக்ஷ்மி நரசிம்ஹ அவதாரங்களாய் இந்த புண்ணியமான பாரத தேசத்தில் தோன்றியது. 4. அந்தர்யாமி - அடியார்களான நம் மனதில் அவரவர் கட்டை விரலளவு ஸ்ரீமன் நாராயணர் எப்போது வீற்றிப்பது 5. அர்ச்சை - திருவரங்கம், திருமலை, திருவல்லிக்கேணி முதலிய திவ்யதேசங்களிலும் மற்ற கோயில்களிலும் எழுந்தருளியிருக்கும் விக்ரஹ திருமேனிகள்.

  இந்த ஐவற்றுள் ஐயன் வள்ளுவர் மேற்சொன்ன குறளில் குறிப்பிடுவது அந்தர்யாமி நிலையை. அடியார்களின் அகமாகிய தாமரையில் வீற்றிருக்கும் திருமாலின் திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இந்த பூமியில் நீண்ட நாட்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்.

 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது


திருமாலிடம் எல்லாம் உண்டு, ஒன்றை தவிர. அவன் அநாதன். அவன் எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் நாதன் அவனுக்கு நாதன் கிடையாது. மஹாபலி சக்ரவர்த்தியிடம் இந்திரனுக்காக மூன்றடி நிலம் கேட்கப்போன குரளனான ஸ்ரீ வாமனன் தன்னை அநாதன் என்று கூறி அறிமுகப்படித்திக் கொள்கிறான். மஹாபலி 'அனாதை' என்று புரிந்துகொள்ள அவன் குரு சுக்ரசாரியார் வந்திருப்பவன் 'அனாதை' அல்ல; தனக்கு ஒரு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, தலைவன் அதாவது நாதன் இல்லாத, திருமால் என்று புரியவைத்தார்.

 ப்ர ஹலாதனுக்கு கொடுத்த வரத்தின்படி அவன் பேரனான மஹாபலியை ஸ்ரீ வாமனன் கொல்லவில்லை. அதே காரணத்தினால் தான் ப்ரஹலாதனின் வழி வந்த பாணசுரனை ஸ்ரீ கிருஷ்ணரும் கொல்லவில்லை.

 கலியுகமாகிய இன்றும், தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஸ்ரீ ஒப்பிலியப்பனை நாம் கும்பகோணம் அருகே திருவிண்ணகர் என்ற ப்ரசித்தி பெற்ற திவ்ய தேசத்தில் சேவிக்கலாம். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத திருமாலின் திருவடியை சேர்த்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு தங்கள் மனக்கவலை மாறாது என்கிறார் திருவள்ளுவர்.

 கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை 


 எவனொருவனின் தலை எண்குணதானின் திருவடிகளை வணங்கவில்லையோ அவனுக்கு ஐம்பொறிகளான கண், காது, வாய், மூக்கு, மெய் முதலியவற்றால் பயன் ஏதுமில்லை. இங்கு 'எண்குணத்தான்' எனும் சொல் 8 குணங்களையும் குறிக்கும் எண்ணிறைந்த குணங்களையும் குறிக்கும்.

  ஸ்ரீமன் நாராயணன் அநேக கல்யாண குணங்கள் நிரம்பியவர். அதனாலேயே தமிழில் 'நம்பி' என்றும் வடமொழியில் 'குணபூர்னர்' என்றும் அழைக்கபடுகிறார். ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், சக்தி, தேஜஸ், சௌசீல்யம், வாத்சல்யம் என்கிற முக்கிய 8 குணங்களும் மேலும் மார்தவம், ஆர்ஜவம், சௌஹர்தம், சாம்யம், காருண்யம், மாதுர்யம், காம்ப்ஹீர்யம், ஔதார்யம், சாதுர்யம், ச்தைர்யம், தைர்யம், சௌர்யம், பராக்கிரமம், சத்யகாமம், சத்யசங்கல்பம், க்ருதித்வம், க்ருதங்க்னதை, மற்றும் பலப்பல கல்யாண குணங்களை தன்னிடையே கொண்டான் கொண்டல்வண்ணனான கண்ணன், கேசவன், மாதவன் என பல நாமம்கள் கொண்ட திருமால். இந்த கல்யாண குணங்கள் பற்றித்தான் திருவள்ளுவர் மேற்படி குறளில் விளக்கியுள்ளார்.

  இன்னும் கடவுள் வாழ்த்து அதிகாரத்திலுள்ள மற்ற குறள்களையும் விரிவாக சொல்லலாம். ஆயினும் மற்ற அதிகாரங்களும் இருப்பதால் அவற்றை பார்ப்போம்.

  மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு 


 மடி இன்மை அதாவது சோம்பலில்லாமை பற்றி பாடவந்த வள்ளுவர், மஹா விஷ்ணு வாமனனாக வந்து பின்னர் நெடு நெடுவென வளர்ந்து த்ரிவிக்ரமனாக விண்ணையும் மண்ணையும் தன் திருவடிகளால் அளந்தது போல சோம்பல் இல்லாத மன்னவன் இந்த உலகம் முழுவதையும் அடைவான் என்கிறார்.

அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் குறள்கள் கண்ட நாம் காமத்துப்பாலில் வள்ளுவரின் வாசுதேவர குரல்களைப் பார்ப்போம்.

 தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்தாமரைக் கண்ணான் உலகு 


  புணர்ச்சி மகிழ்தல் பற்றி பாடவந்த வள்ளுவர், தன் காதல் மனைவியின் தோளில் தூங்குவதைவிட பங்கஜாக்சன் என்றும் தாமரைக்கண்ணன் என்றும் பெயர்க் கொண்ட திருமாலின் வைகுந்தம் இனிதாக இருக்குமோ? என்று கேள்வி எழுப்புகிறார் காதல் வசப்பட்ட வள்ளுவர். இங்கு காதலை உயர்த்தி சொல்ல விரும்பும் போதும் தன் அடிப்படை குணத்தை காட்டும் விதமாக மனித இனத்தின் ஒரே இலக்கான ஸ்ரீ வைங்குந்தம் எனும் திருநாட்டைப் பற்றித்தான் குறிபிடுகிறார்.

                               அழல்போலும்மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை   


  தலைவனுக்காக காத்திருக்கும் தலைவி பகற்பொழுதுப்போய் மாலைப்பொழுது வந்ததன் அடையாளமாக சொல்லுவது யசோதை இளஞ்சிங்கம் கண்ணன் மாடுமேய்க்கும் போது ஊதும் புல்லாங்குழலைத்தான். இங்கே கண்ணனே தலைவன் ராதை முதலிய கோபிகைகளே தலைவிகள். மாலைப்பொழுது வந்துவிட்டது, தூரத்தில் கண்ணன் குழலோசை கேட்கிறது, ஆனால் கண்ணன் இன்னும் இங்கே வரவில்லை. கோபிகைகள் காத்திருக்கிறார்கள் கண்ணனுக்காக.

        சுபம்(சர்வம் கிருஷ்ணார்ப்பணம்)

Comments

Popular posts from this blog

புராண பேத தாத்பர்ய விளக்கம்

கிருஷ்ணலீலா ஆபாச தர்ப்பணம்

திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்